தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு, சமீபகாலமாக அரசியல் தொடர்பான கோஷங்களும் எழுந்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் நடந்த சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, தனது அடுத்தடுத்த படங்கள் முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், ‘தாய்கிழவி’ படத்தை இயக்கிய இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள ‘சேயோன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்தபோது, ரசிகர்கள் உற்சாகமாக ‘வருங்கால முதல்வர் SK’ என கோஷமிட்டுள்ளனர். இதைக் கேட்ட சிவகார்த்திகேயன் உடனடியாக தனது கையை காட்டி, “அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம்” என்பதுபோல் அன்பாக சைகை செய்து ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சந்திப்புகளில் இதுபோன்ற அரசியல் சார்ந்த கோஷங்கள் எழுவது வழக்கமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!