தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளையும், சர்வதேச தரத்திலான விஷுவல்ஸையும் உருவாக்கும் முயற்சியில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘சர்தார் 2’. நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘சர்தார் 2’ திரைப்படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் போது, இதுபோன்ற விஷுவல்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை தமிழில் எப்போது உருவாக்கப் போகிறோம் என்ற ஏக்கம் இருக்கும். அந்தத் தரத்தை எட்டுவதற்கான முயற்சியாகத் தான் ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் பிரம்மாண்டத்தை உருவாக்க படக்குழு மேற்கொண்ட கடினமான பணிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகும் கிட்டத்தட்ட ஒரு வருடம் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் எடிட்டிங் பணிகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, படத்தின் பீரியட் காட்சிகளுக்காக பழைய காலத்து கார்கள், விமானங்கள், ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உருவாக்க வேண்டியிருந்ததாகவும், இந்தப் பணியில் கலை இயக்குநர் ராஜீவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இதனால் ‘சர்தார் 2’ படத்தின் விஷுவல்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Listen News!