தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தற்போது இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகி வரும் ‘An Ordinary Man’ திரைப்படத்தை அவரே இயக்கி தயாரித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கவைத்துள்ளது.
இந்நிலையில், ‘An Ordinary Man’ படத்திற்கு பாடகி கெனீஷா பிரான்சிஸ் இசையமைக்க உள்ளதாக ரவி மோகன் ஸ்டியோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் முதன்முறையாக முழுநீளத் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கெனீஷா பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கெனீஷா பிரான்சிஸ், ஆரம்பத்தில் இந்தப் படத்தின் இசைப் பொறுப்பை ஏற்க தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ரவி மோகனின் திரைக்கதை மிகவும் சிறப்பாக இருந்ததால், அவருக்கு இன்னும் அனுபவம் வாய்ந்த சிறந்த இசையமைப்பாளர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், சரியான நேரத்தில் இந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்ததாகவும், முழுநீள திரைப்படத்திற்கு இசையமைப்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதால், மிகவும் கவனமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, படத்தின் கதையை இசை ஒருபோதும் மிஞ்சிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்ததாக கூறிய கெனீஷா, அதற்காக பல்வேறு இசை வகைகளை ஆராய்ந்து, கதைக்கு ஏற்ற வகையில் இசையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கெனீஷாவின் இந்த வெளிப்படையான கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
Listen News!