திரையுலகில் நடிகைகளின் திருமணம் மற்றும் தாய்மை குறித்து பல்வேறு கருத்துகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற கருத்தும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் தனது அனுபவம் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை மற்றும் தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய பூர்ணா, திருமணம் அல்லது குழந்தை பிறந்ததால் தனது சினிமா பயணத்தில் எந்தவிதமான இடைவெளியும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். ஹீரோயினாக பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், தாய்மையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்போது அந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறியிருப்பதாகவும், தாய்மையை ரசித்து வாழ்ந்து வருவதாகவும் பூர்ணா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்த பிறகு மட்டுமே இதுபோன்ற அனுபவங்களை பெற வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திருமணம் மற்றும் குழந்தை பிறந்த பிறகும் தனக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது ஒவ்வொரு நாளையும் ரசித்து, குடும்பத்தையும் தொழிலையும் சமநிலையுடன் கவனித்து வருவதாக பூர்ணா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Listen News!