சமீபத்திய பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பகிர்ந்துள்ள சில கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்திற்குப் பிறகு தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி, அந்த சமயத்தில் தனக்கு எதிராக வந்த கேலி, கிண்டல் மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அந்த விமர்சனங்களை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை என்றும், அதன் பின்னர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை கூட தவிர்க்கத் தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு உருவாக்கப்பட்ட விளம்பரப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால், ஏற்கனவே தன்னை சுற்றி உருவான எதிர்மறையான விமர்சனங்கள் அந்த விளம்பரப் படத்தையும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக, அதில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒரு படத்தின் தோல்வி அல்லது விமர்சனங்கள் நடிகர்களின் மனநிலையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த அனுபவம் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது அவரது இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Listen News!