தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான கலை மரியாதையாக விளங்கும் “கலைமாமணி விருது”, வருடா வருடம் இயல், இசை, நாடகக் கலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் ஒரு மாநில அளவிலான உயரிய விருது ஆகும். பண்டிகை பொழுதுகளில் வழங்கப்படும் இவ்விருது, தமிழ்த்திரை உலகிலும், நாடக உலகிலும் மிகுந்த பெருமைக்குரிய அங்கீகாரம்.
இந்த ஆண்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் (2021, 2022, 2023) ஒன்றாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பல முக்கியமான திரை நட்சத்திரங்களும், கலைஞர்களும் இடம்பிடித்துள்ளனர்.
2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெற்றவர்களில், தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த முக்கியமான பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், எஸ்.ஜே. சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், சாய் பல்லவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிக குறைந்த வயதிலேயே, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் அனிருத் ரவிச்சந்தர். அவரது இசை, ரசிகர்களின் ஒவ்வொரு உணர்வுகளிலும் பின்னியிருக்கிறது.
“3” படத்தின் ‘Why This Kolaveri Di’ மூலம் உலகளாவிய கவனத்தை பெற்றவர், அதன் பிறகு திரையுலகத்தில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இளமை, திறமை, நேர்த்தி, நவீனம் ஆகிய எல்லாவற்றையும் கலந்த இசையுடன், தல, தளபதி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய அனிருத், இன்று இந்திய அளவில் மிகப் பெரிய இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.
கலைமாமணி விருது பெற்றது குறித்து, தனது சமூக வலைத்தள பக்கங்களில் அனிருத் வெளியிட்ட நன்றி அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறியுள்ளதாவது, “மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இயல், இசை, நாடகக் கழகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
அதுமட்டுமல்லாது, “எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதைவிட முக்கியமாக, எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.” என்றார் அனிருத்.
Listen News!