ஆர்ஜே பாலாஜி தனது சிறுவயதில் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி, பின்னர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்து வருபவர் ஆர்ஜே பாலாஜி. குறிப்பாக, நகைச்சுவை கலந்த தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமைந்த இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்தடுத்த திரைப்படப் பணிகளில் ஆர்ஜே பாலாஜி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது 15 வயதில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் குடும்பத்துடன் அடிக்கடி வீடு மாறியதாகவும், அப்போது தன்னைவிட சுமார் 10 வயது மூத்த சிலருடன் நட்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை அந்த நண்பர்கள் தன்னை மது அருந்த அழைத்ததாகவும், அதை முயற்சி செய்து பார்த்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் அனைவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த நபர்கள் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு, இருட்டான பகுதியில் நடந்து சென்ற பெண்ணின் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அப்போது தனக்கு வெறும் 15 வயது மட்டுமே என்றும், நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். சிறுவயதில் தன்னுடன் பழகியவர்கள் இவ்வாறு செய்ததை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும், அந்த சம்பவத்தை இன்றுவரை ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!