நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான சுருதி ஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் தோற்றத்தை அவரது அனுமதியின்றி சிலர் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட டீப்பேக் வீடியோக்கள் மற்றும் போலியான ஆபாச உள்ளடக்கங்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எதிராக சுருதி ஹாசன் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது தனிப்பட்ட உரிமை, நற்பெயர் மற்றும் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட 18 நிறுவனங்களுக்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார், சுருதி ஹாசனின் நற்பெயருக்கும் கண்ணியத்துக்கும் டீப்பேக் வீடியோக்கள் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இணையத்தில் ஒருமுறை பரவும் போலி வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்படுவதால், சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட உரிமைகள் நிரந்தரமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற பாதிப்புகளுக்கு வெறும் பண இழப்பீடு மட்டும் போதுமானதாக இருக்காது எனக் கூறிய நீதிமன்றம், சுருதி ஹாசன் தொடர்பான டீப்பேக், போலி ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Listen News!