இந்திய திரையுலகில் தற்போது உருவாகி வரும் முக்கியமான பயோபிக் திரைப்படங்களில் ஒன்றாக, பாரத ரத்னா விருது பெற்ற பிரபல கர்நாடக சங்கீதப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜெர்சி’, ‘கிங்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம் தின்னூரி இப்படத்தை இயக்குகிறார். அல்லு அரவிந்த் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குறிப்பாக, கர்நாடக சங்கீத உலகின் முக்கிய ஆளுமையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படத்திற்கு அனிருத் இசையமைப்பது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் தோற்றத்தை ராஷ்மிகா திரையில் கொண்டு வருவதற்காக, அவருக்கு பிரத்யேக மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டதுடன், நடிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி ‘மீரா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரது வாழ்க்கையில் எந்தக் காலகட்டம் மற்றும் எந்த முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது என்பது தற்போது வரை சஸ்பென்ஸாகவே உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் வெளியாகவுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தை அறிமுகப்படுத்துகிறார். இதனால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!