மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஆஹானா கிருஷ்ணா மற்றும் தமிழ் சினிமாவில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான நிமிஷ் ரவி ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தைத் தொடர்ந்து, நேற்று இரவு ஆஹானா கிருஷ்ணா மற்றும் நிமிஷ் ரவி இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, தங்களது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர்.
இதையடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆஹானா கிருஷ்ணா தனது 20வது வயதில் நிமிஷ் ரவியை சந்தித்ததாகவும், அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகள் காதலித்து தற்போது தனது 30வது வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமாக, 2019ஆம் ஆண்டு நிமிஷ் ரவி ஒளிப்பதிவாளராக அறிமுகமான ‘லூகா’ திரைப்படத்தில் ஆஹானா கிருஷ்ணாவும் நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. வயது மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு திருமணத்தை தள்ளிப்போட்டிருந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது நீண்டகால காதலை திருமண பந்தமாக மாற்றியுள்ளனர்.
இவர்களது 10 ஆண்டுகால காதல் திருமணமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!