மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், இயக்குநர் விஷ்ணு மோகனுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘ஆப்ரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம், இருவரும் இணையும் முதல் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
போஸ்டரில் பிரம்மாண்டமான பெண் சிலை ஒன்று நகரத்தின் மீது நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ஒரு கையில் வாளும், மறுகையில் கேடயமும் ஏந்தியுள்ள அந்த சிலையை சுற்றி அடர்த்தியான மேகங்கள் சூழ்ந்துள்ளன. அதன் அருகில் போர் விமானம் இடம்பெற்றிருப்பது படத்தின் கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், ‘ஒரு தேசத்தின் வாக்குறுதி’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

‘மெப்படியான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தேசிய விருதை பெற்ற விஷ்ணு மோகன், தற்போது மோகன்லாலை வைத்து பிரம்மாண்டமான படத்தை உருவாக்குகிறார். இப்படத்தில் அர்ஜுன் ராம்பால், பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘துரந்தர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஷஷ்வத் சச்தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள போர் விமானம், சிலை மற்றும் தேசம் சார்ந்த வாசகம் என அனைத்தும் இணைந்து, ‘ஆப்ரேஷன் கங்கா’ ஒரு பிரம்மாண்டமான தேசிய பின்னணியிலான படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!