தென்னிந்திய சினிமாவில் ஹாரர் வகை படங்களில் முக்கியமான மைல்கல்லாக திகழ்ந்தது அனுஷ்கா ஷெட்டி நடித்த ‘அருந்ததி’ படம். 2009ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்று, அனுஷ்காவின் கேரியரில் மறக்க முடியாத திருப்புமுனையாக அமைந்தது. அந்தப்படம் வெளிவந்த காலத்தில், அதன் கதை, இசை, மற்றும் அனுஷ்காவின் அதிரடியான நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தன.

இப்போது, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அருந்ததி’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாபெரும் ரீமேக்கை தயாரிக்கிறது தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Geetha Arts. சிறந்த தயாரிப்புத் தரத்துக்கும், வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களுக்கும் பெயர் பெற்ற Geetha Arts, இந்த முறை அருந்ததியை ஹிந்தி ரசிகர்களுக்காக புதுமையாக வடிவமைக்க முடிவு செய்துள்ளது.
திரைப்படத் துறையில் இருந்து கிடைத்த தகவலின்படி, படத்தின் கதைத் தளத்தை அதேபோல் வைத்துக் கொண்டு, சில மாற்றங்களுடன் நவீன பார்வையில் படமாக்கப்படவுள்ளது. அதாவது, புதிய தலைமுறை பார்வையாளர்களின் ரசனைக்கேற்ற வகையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் மோகன் ராஜா, அதாவது, இவர் “தனி ஒருவன்” திரைப்படத்தை இயக்கிய திறமையான இயக்குநர்.அவரது இயக்கத்தில், அருந்ததியின் புதிய பதிப்பு ஹிந்தி திரையுலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சமீபத்தில், தென்னிந்தியாவின் இளம் நாயகியாக திகழும் ஸ்ரீலீலா இந்தப் படத்தின் நாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலீலா தற்போது தெலுங்கு சினிமாவில் மிக வேகமாக உயர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!