சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ரஜினியின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாத நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்திற்கு சென்சார் தரப்பில் ‘A’ சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான வன்முறை காட்சிகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
‘A’ சான்றிதழ் கிடைத்தால் 18 வயதுக்கு குறைவானவர்கள் படத்தை பார்க்க முடியாது என்பதால், குடும்ப ரசிகர்களின் வருகை குறைந்து வசூல் பாதிக்கப்படலாம் என படக்குழு கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு எப்படியாவது ‘U/A’ சான்றிதழ் பெற்றாக வேண்டும் என ரஜினி தரப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
மேலும், ‘A’ சான்றிதழுடன் படத்தை வெளியிட வேண்டாம் என்றும் ரஜினி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ‘A’ அல்லது ‘U/A’ சான்றிதழா என்பது விரைவில் தெரியவரும்.
Listen News!