• Sep 03 2026

‘பத்மாவத்’ குறித்து ஸ்வரா பாஸ்கர் பேச்சு சர்ச்சை!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியை குறிப்பிட்டு நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், சாகித் கபூர் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பத்மாவத்’.

இந்தத் திரைப்படத்தின் இறுதியில் ராணி பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனே, மகளிர் படையுடன் எரியும் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்தக் காட்சி அப்போது பெரும் பேசுபொருளாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்தக் காட்சியை சுட்டிக்காட்டிப் பேசிய ஸ்வரா பாஸ்கர், “கோழைத்தனமாக உயிரை நீக்கியிருக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இந்து மதத்தைச் சேர்ந்த அரச பெண்களை எவ்வாறு கோழைகள் எனக் கூறலாம் எனக் கண்டனங்களும் எழுந்தன.


இதையடுத்து தனது கருத்து தொடர்பில் ஸ்வரா பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ராணி பத்மாவதியையோ, அரண்மனை பெண்களையோ கோழைகள் என்று நான் கூறவில்லை. என்னதான் இருந்தாலும் உயிர் முக்கியம் இல்லையா? முடிந்து போன விஷயங்களுக்கு உயிர் கொடுப்பது போல இருக்கிறதே என்றுதான் அந்தக் கருத்தை தெரிவித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்களின் வீரத்தை தாம் அறிவதாகவும், அதேவேளை தனது மனக்குமுறல்களையே வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் யாரையும் தவறாக குறிப்பிடவில்லை” என்றும் ஸ்வரா பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement