வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து சிம்பு வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், அதே நேரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன், ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘விடுதலை’ என அவர் இயக்கிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. தற்போது சிம்புவை வைத்து ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த ரிலீஸ் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “‘அரசன்’ படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வராது. படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நான் கொடுத்த வாக்குப்படி ‘அரசன்’ நிச்சயம் சம்பவம் பண்ணும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘World of Arasan’ என்ற பெயரில் சிறப்பு தொகுப்பு ஒன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.
Listen News!