தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர், நடிகர் மற்றும் சமூக அக்கறை கொண்ட கலைஞராக அறியப்படும் ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது மனமார்ந்த வாழ்த்துக்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். காரணம், ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கார்த்திகா என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனையை அவர் தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார் என்பதால் தான்.

சமீபத்தில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், இந்தியா பல துறைகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்களை கைப்பற்றியது. அதில் முக்கியமான ஒரு சாதனை பெண்கள் கபடி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது தான்.
இந்த அணியில் தமிழ்நாட்டின் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற கபடி வீராங்கனை தனது அசத்தலான திறமை, விளையாட்டு நுணுக்கம் மற்றும் உற்சாகம் என்பவற்றால் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கார்த்திகாவின் வெற்றியை முன்னிட்டு, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
அவர் கூறியுள்ளதாவது, “ஜெயில் படப்பிடிப்பின் போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது. அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.”
அவரின் இந்த உணர்ச்சி மிகுந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் கார்த்திகாவையும், அவரின் குடும்பத்தையும் பாராட்டி, “கண்ணகி நகர் இப்போது இந்தியா முழுவதுக்கும் பெருமை சேர்த்துள்ளது!” என்று கூறி வருகின்றனர்.
Listen News!