கரூர் சம்பவம் தொடர்பில் வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் 30 பேர் மேல் வழக்கு தொடரப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பிரபல யூட்யூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார் .
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை காவல் துறையினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்ததாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறி இருந்தார்.
இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அவரை அரச மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இந்த நிலையில், அரச மருத்துவமனையில் இருந்து பெலிக்ஸ் ஜெரால்டுக்கு வீல் சாரில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவருடைய மனைவியும் மகளும் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில் அவருடைய மனைவி கூறுகையில், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இன்னும் வேதனையாக தான் உள்ளது. அதில் ஒருவராக எனது புருஷனையும் சேர்த்து விடாதீர்கள். அவரை கைது செய்யும் போது கமிஷனர் ஆபீசுக்கு கொண்டு போவதாக சொன்னார்கள். ஆனால் மேலதிகமாக எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை.
இன்று காலையிலிருந்து இங்கே இருக்கின்றேன். ஆனால் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. இதே தனியார் மருத்துவமனை என்றால் நான் என் புருஷனுக்கு பக்கத்தில் தான் இருந்திருப்பேன். எதற்காக இப்படி பண்ணுறாங்க என்று தெரியவில்லை. அவருக்கு எல்லா டெஸ்டும் எடுத்த பின்பு தான் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதாக சொல்கிறார்கள்.
அவருடைய மகள் கூறுகையில், என்னுடைய அப்பா தானாக எதையும் உருவாக்கிச் சொல்லவில்லை. இந்தியாவின் மிகப் பிரபலமான ஆங்கில பத்திரிகை ஒன்றில் கூறப்பட்ட விடயங்களை தான் அவர் எடுத்துச் சொன்னார். இதில் என்ன தப்பு இருக்கின்றது. நியாயமான முறையில் எல்லாவற்றையும் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.
Listen News!