நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி, ‘மாரி 2’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், இந்த ஆண்டும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் உருவாகி வரும் முக்கியமான படம் தான் டி55. இப்படத்தை ‘அமரன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
அமரன் படத்தை போலவே டி55 திரைப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
டி55 திரைப்படத்தை தனுஷின் வொண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். மேலும் நடிகை ஸ்ரீலிலா ஒரு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் மற்றொரு முக்கிய கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளார். ‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் சாய் பல்லவி.
அதேபோல், தனுஷ் உடன் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் இவர்களின் கூட்டணி ரசிகர்களிடம் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் இன்றளவும் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!