இந்திய இசை உலகின் மாமேதை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வெற்றியாளர்களை மட்டும் அல்ல, போட்டியில் தோல்வியடைந்தவர்களையும் மதிக்கும் அவரது மனிதநேய அணுகுமுறை, ரசிகர்களை மட்டுமல்லாமல் பல இளம் கலைஞர்களையும் நெகிழ வைத்துள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட AR ரஹ்மான், " ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன். சில சமயம் நன்றாக பாடுபவர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும். நரேஷ் ஐயர் கூட அப்படித்தான்.

23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது. அவரை அழைத்து 'நீ தோற்றுவிட்டாய், ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாட கிளம்பி சென்னை வா' என்றேன். அவருக்கு முதல் பாடலிலேயே (Roobaroo Rang De Basanti) தேசிய விருது கிடைத்தது." என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகள் அவரது கலை உணர்வையும், மனிதர்களை மதிப்பிடும் ஆழ்ந்த பார்வையையும் வெளிப்படுத்துகின்றன. திறமை என்பது ஒரு மேடையில் கிடைக்கும் தீர்ப்பால் தீர்மானிக்கப்பட முடியாது என்பதையே அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
Listen News!