நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தயாரிப்பாளருமான ஃபஹத் ஃபாசில் கலந்துகொண்டு படம் குறித்தும், தமிழ் ரசிகர்களின் வரவேற்பு குறித்தும் பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய ஃபஹத் ஃபாசில், முதலில் படக்குழு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, எப்போதும் தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் படக்குழு கவனமாக இருப்பதாகவும், அந்த வகையில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தங்களுக்கு மிகவும் சிறப்பான திரைப்படம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இது மிகவும் அழகான மற்றும் சிறப்பான திரைப்படம் என்றும் தெரிவித்தார். நல்ல திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், தற்போது இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறினார்.
இதனிடையே, இயக்குநர் பிரேமுடன் இணைந்து தான் பணியாற்றியுள்ள அடுத்த தமிழ்த் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார். அப்போது மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திப்பேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!