நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்க உள்ளார். இந்த படம் ஒரு டைம் டிராவல் கதையம்சத்தில் உருவாக இருக்கிறது. நகைச்சுவை மற்றும் விஞ்ஞானத் த்ரில்லர் கலந்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது.
சிறப்பு என்னவென்றால், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார். இது இயக்குநர் வெங்கட் பிரபு – இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணிக்கு முக்கியமான படம் என்றே சொல்லலாம். அதேசமயம், அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆகி உள்ளன. எனவே, இந்த புதிய படம் மீதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளன.
Listen News!