புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்படும் புதுச்சேரி திரைப்பட விழா நாளை (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது. இதுவரை மாநில அளவில் நடைபெற்ற இந்த விழா, இந்த ஆண்டிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்படும் படத்தின் இயக்குநருக்கு ‘நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்துக்கும், 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி திரைப்படத்துக்கும் வழங்கப்படுகிறது. விருது பெறும் இயக்குநர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

பிப்ரவரி 12 முதல் 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழா, கடற்கரைச் சாலை, காமராஜர் மணிமண்டபம், அலியான்ஸ் பிரான்சிஸ் அரங்கம் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற உள்ளன.
தொடக்க விழாவில் நடிகைகள் ரேவதி, சுனைனா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், பா. ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 45 திரைப்படங்கள், 8 மொழிகளில் திரையிடப்பட உள்ள நிலையில், அனுமதி முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!