தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பேசப்படும் ஜோடிகளில் ஒன்றாக தொடர்ந்து கவனம் ஈர்த்து வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. பல ஆண்டுகளாக இவர்களுக்கிடையே காதல், திருமணம் போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பரவி வந்தாலும், இருவரும் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்–ராஷ்மிகா ஜோடி ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றது. அதன்பின் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவியபோது, “இவர்கள் நண்பர்களை தாண்டிய உறவில் உள்ளார்களா?” என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.
இருவரும் பல பேட்டிகளில் “நாங்கள் நல்ல நண்பர்கள்” என்றே பதிலளித்து வந்தனர். ஆனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சில சினிமா வட்டாரங்களும் இவர்களின் உறவு குறித்து பல்வேறு ஊகங்களை முன்வைத்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, அக்டோபர் மாதத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவியதுடன், பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் தெரிவிக்கத் தொடங்கினர்.

ஆனால், இதுகுறித்து இருவரும் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. இந்நிலையில், தற்போது இவர்களின் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி மீண்டும் சினிமா வட்டாரங்களை பரபரப்பாக்கியுள்ளது. அதன்படி, வரும் 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து வெளியிட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தகவல்களுக்கும் அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
Listen News!