இந்தியில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
இந்த நிலையில், 'ராமாயணா’ படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அந்தப் படத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் விஜய் சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார். ‘
மேலும், இப்படத்தில் நடிப்பதாக தகவல் எங்கிருந்து பரவியது என்பதே தனக்கே தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'ராமாயணா’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக வெளியான இந்த செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

குறிப்பாக, புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த பிரமாண்டப் படத்தில், அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற விவாதங்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டன.
ஆனால் தற்போது விஜய் சேதுபதி நேரடியாக விளக்கம் அளித்ததன் மூலம், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Listen News!