'ஜமா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற பாரி இளவழகன், தற்போது தனது அடுத்த படைப்பான 'அன்பே டயானா' திரைப்படத்துடன் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தப் படத்தை, குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஏழாவது திரைப்படமாக 'அன்பே டயானா' உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேசமயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிப்பிற்குத் திரும்பியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் வாழ்க்கை சம்பவங்களை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக 'அன்பே டயானா' உருவாகியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான திரைக்கதையுடன் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'பெரம்பூர் கானா' பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, படத்தின் முன்னோட்டக் காட்சியை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் பெரம்பூரின் இயல்பான வாழ்க்கை முறையை அழகாக பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'அன்பே டயானா' திரைப்படம் வரும் ஜூலை 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'ஜமா' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பாரி இளவழகனின் இந்தப் புதிய முயற்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது வெளியாகும் நாளில் தெரியவரும்.
Listen News!