தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது இயல்பான நடிப்பாலும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அஸ்வந்த். குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தமிழக அரசு திரைப்பட விருது கிடைக்காத ஏமாற்றம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அஸ்வந்த் வெளியிட்ட இந்த வீடியோவில், தனது மனவேதனையையும், ஒரு கலைஞனாக எதிர்கொள்ளும் வலியையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த உருக்கமான பேச்சு, ரசிகர்களிடையிலும் திரையுலக வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாக அஸ்வந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், “தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் என் பெயர் இடம்பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் விருதுப் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. 2019ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில், ராசுக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அஸ்வந்தின் நடிப்பு, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு, பலரையும் ஆழமாக பாதித்தது.
அந்த நடிப்பிற்காக நிச்சயமாக மாநில விருது கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அந்தப் படத்திற்கே விருது கிடைக்கவில்லை. இதன் பின்னரும், 2022ஆம் ஆண்டு வெளியான ‘மைடியர் பூதம்’ திரைப்படம் மூலமாக, விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால் அதற்கும் விருது கிடைக்கவில்லை.” என்று அவர் வருத்தமாக தெரிவித்துள்ளார்.
Listen News!