நடிகை ஷாலினி பாண்டேவைப் போல சித்தரித்து AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகை ஷாலினி பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷாலினி பாண்டே, தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும், பல்வேறு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவும் இருக்கும் நிலையில், அதனை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவது மிகவும் கவலைக்குரியது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பெண்களை குறிவைத்து இதுபோன்ற போலி வீடியோக்களை உருவாக்கி அவர்களை மனரீதியாக துன்புறுத்துவது மிகவும் வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னைப் போல உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோ உண்மையானது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ள அவர், இதுபோன்ற உள்ளடக்கங்களை யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அந்த வீடியோவை பார்த்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தில் புகாரளிக்குமாறும், அதன் பரவலுக்கு காரணமாக இருக்க வேண்டாம் என்றும் ஷாலினி பாண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த விவாதத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!