மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, திரையுலகை தொடர்ந்து பாதித்து வரும் இணையதள திருட்டு மற்றும் படங்கள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுப்பது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
இது தொடர்பாக பேசிய கார்த்தி, “நம்முடைய முதலமைச்சராக விஜய் சார் இருக்கிறார். திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகும் படங்கள் குறித்து அவர் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார். இதற்கு அவர் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தபோது இந்த விவகாரம் குறித்து பேசியதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். “நான் நம்முடைய முதலமைச்சரை சந்தித்தபோது, அண்ணா, மற்றவர்களை விட இந்தப் பிரச்சினை உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கார்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி, நல்ல கதைகளை தேர்வு செய்து ரசிகர்களுக்கு சிறந்த படங்களை வழங்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருட்டு இணையதளங்கள் மூலம் திரைப்படங்கள் வெளியாகும் பிரச்சினை குறித்து கார்த்தி வெளிப்படையாக பேசியிருப்பது தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!