நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள் தொடர்ச்சியாக கவனம் பெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கை விவசாயத்தின் முன்னோடியான நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு, இயற்கை விவசாயத்தில் நேர்மையாக ஈடுபட்டு வரும் விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வை அவர் நடத்தி வருகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி சௌந்தரராஜா கௌரவித்தார். இந்த நிகழ்வில் விவசாயிகளின் பங்களிப்பை பாராட்டிய அவர், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தரராஜா, "நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எங்கள் அறக்கட்டளை சார்பில் விருதுகளையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கி, அவர்களுக்கான நன்றியை வெளிப்படுத்தியுள்ளோம். இது என் வாழ்க்கையின் மிகவும் அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகும்" என்றார்.
மேலும், "கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளை கௌரவித்தோம். அப்போது விவசாயிகளிடம் கிடைத்த மகிழ்ச்சியும் வரவேற்பும், இந்த ஆண்டும் இதே நிகழ்வை நடத்துவதற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது" என்றும் தெரிவித்தார்.

இன்றைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் அவசியத்தை எடுத்துரைத்த அவர், "உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை அல்ல; மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்" என்று கூறினார்.
அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்த சௌந்தரராஜா, "தற்போதைய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், 'அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயியின் மகனாக பிறப்பேன்' என்று கூறியிருந்தார். அந்த எண்ணத்தை வைத்தே அவர் விவசாயிகளுக்காக நல்ல பல திட்டங்களை முன்னெடுப்பார் என்ற மிகுந்த நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
மேலும், "விவசாயிகளை பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமை. அதிகளவில் மரங்களை நட வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். நடப்பட்ட மரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, "எனது 'மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை' மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என சௌந்தரராஜா உறுதியளித்தார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
Listen News!