தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படைப்புகளாலும், மனித உணர்வுகளை நெகிழவைக்கும் கதைகளாலும் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் சேரன். ஆட்டோகிராஃப் போன்ற பல படங்களில் தனது படைப்புகளால் பெருமளவில் பாராட்டைப் பெற்றவர்.

சமீபத்தில் ஆட்டோகிராஃப் திரைப்படம் மீண்டும் வெளியான போது, இன்றும் அந்தப் படத்துக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு குறையாதது தெளிவாகத் தெரிந்தது. திரையரங்குகளுக்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தது, சேரன் படங்களின் நீண்ட நாள் தாக்கத்தை மீண்டும் உணர்த்தியது.
அத்தகைய சூழலில், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சேரன் பேசிய உரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, காதல் மற்றும் சமூகப் பார்வைகள் குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்கள் மற்றும் வாசகர்களிடையே பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் பேசும்போது சேரன், “சமூகத்தில் ஒரு பெண்ணைத் தான் காதலிக்க வேண்டும் என்று இல்லை. நாம் எந்த ஒரு உயிரின் மேல் அன்பு வைத்தாலும் அது காதல் தான். காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை. சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் தான் ‘கள்ளக்காதல்’. எனவே, அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டுவிட்டு யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள்." என்று கூறியிருந்தார்.
சேரனின் இந்த உரை, சமூகத்தில் வாழும் பொதுவான மனித உணர்வுகளை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், காதல் பற்றிய பாரம்பரிய கருத்துகளை சிந்திக்க வைக்கின்றது. தமிழ் சினிமாவில் காதல் கருத்துகளை மிக நேர்த்தியாகவும், உணர்ச்சிவசப்பட்டும் படம்பிடித்தவர் என்பதால், அவரின் இந்த பார்வை ரசிகர்களுக்கு கூடுதல் அர்த்தத்தைக் கொடுத்து வருகிறது.
Listen News!