நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் 'இதயம் முரளி' திரைப்படத்தின் புதிய அப்டேட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதர்வாவுடன் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், நிஹாரிகா மற்றும் ஏஞ்சலீன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் இசையில் வெளியான மூன்று பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் நான்காவது பாடலான “வாம்மா... வாம்மா” வெளியாகியுள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், அதை நடிகர் தனுஷ் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார். பாடலின் வரிகளை ஆதேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.

அதர்வா மற்றும் பிரீத்தி முகுந்தன் ஆகியோரின் காதல் தருணங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், மென்மையான மெலடியுடனும் இளமை ததும்பும் வரிகளுடனும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக தனுஷின் குரல் பாடலுக்கு கூடுதல் உயிரூட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'இதயம் முரளி' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படம் இளைஞர் ரசிகர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!