திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை உடனடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் நடைமுறைக்கு எதிராக நீண்ட நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது முக்கியமான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இனிமேல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறைந்தது 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, திரையரங்குகளின் வருவாயை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வளர்ச்சி மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவதுடன், திரையரங்குகளில் வெளியான படங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் திரையரங்குகளில் திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களுக்கு குறைந்தது 8 வாரங்கள் ஓடிடி வெளியீடு வழங்கக் கூடாது என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீர்மானத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தென்னிந்திய திரையரங்க உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!