2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து வாக்கு மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று செய்தியாளர் சந்திப்பில் கடுமையாக குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டதாகவும், மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், போலி முகவரி, புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் கூறினார். இதனுடன், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏன் வெளியிட மறுக்கிறது?, சிசிடிவி வீடியோக்களை ஏன் அழிக்கிறது?, எதிர்க்கட்சிகளை ஏன் மிரட்டுகிறது?, தேர்தல் ஆணையம் பாஜகவின் ஏஜண்டாக ஏன் செயல்படுகிறது? என 5 கேள்விகளை ராகுல் எழுப்பினார்.
இந்நிலையில், நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கருத்து சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. "இந்திய ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் சிதைக்க முயன்ற பயங்கரவாதிகளை ‘மகாதேவபுரா’ நடவடிக்கை அம்பலப்படுத்துகிறது. இது ஒரு எதிர்க்கட்சியின் போராட்டம் அல்ல, மக்களின் உரிமைக்கான போராட்டம்" என அவர் தெரிவித்துள்ளார். “நாம் தற்போது இறந்த ஜனநாயகத்தில் வாழ்கிறோம். இந்த துரோகத்தின் எதிராக மக்கள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் எழுந்து நிற்க வேண்டும்” என்றும் நடிகர் கிஷோர் வலியுறுத்தினார்.
Listen News!