தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்தும் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் அரசியல் பரபரப்பு தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறும் நோக்கில் மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் வெளியிட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவர் கூறுகையில், “மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கிய பிறகும் ஆளுநர் இன்னும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது ஏன் என்பது மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்யை உடனடியாக அழைத்து முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், எதிர்காலத்தில் ஆளுநர்களால் ஏற்படும் காலதாமதங்களை தவிர்க்க புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். குறிப்பாக, நீதிபதிகள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யும் முறையை அமல்படுத்தினால் அரசியல் சர்ச்சைகள் குறையும் என மன்சூர் அலிகான் கூறியிருப்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!