தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. முதல் தேர்தலிலேயே இத்தகைய வெற்றியை பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இன்னும் கிடைக்காததால், த.வெ.க. தீவிர அரசியல் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட இன்னும் சில உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக உள்ளது. இதன் காரணமாக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற த.வெ.க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை மனுவை வழங்கியும் தேவையான பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
Listen News!