தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் விஜய், அரசியல் வெற்றியின் உச்சியில் இருந்தபோதும் தனக்கு சினிமாவில் வெற்றி கொடுத்தவர்களை மறக்கவில்லை.
அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விஜய்யை ஒரு சாதாரண நடிகரிலிருந்து மக்கள் மனதில் நாயகனாக மாற்றிய படம் பூவே உனக்காக. அந்த திரைப்படத்தை தயாரித்தவர்தான் ஆர்.பி.சௌத்ரி. அதன் பிறகு துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் போன்ற படங்களும் விஜய்யின் கரியரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றன.

சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது சௌத்ரியின் பெரிய ஆசை. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆனால் அரசியலில் முழுமையாக இறங்க முடிவு செய்திருந்த விஜய், அந்த வாய்ப்பிலிருந்து விலகினார். “ஜனநாயகன்” படத்துடன் நடிப்பை முடிக்க தீர்மானித்திருந்ததால் அந்த கூட்டணி மீண்டும் நடக்கவில்லை.
இந்நிலையில் தேர்தல் வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த விஜய்க்கு, சௌத்ரியின் மரணம் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது நடிகர் ஜீவா வீட்டின் மாடியில் இருந்து விசில் அடித்து விஜயின் வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலானது. ஆனால் அதற்கு அடுத்த நாளே அவரது தந்தை உயிரிழந்த செய்தி வந்தது.
சென்னையில் வைக்கப்பட்டிருந்த ஆர்.பி.சௌத்ரியின் உடலுக்கு விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.. அப்போது சோகத்தில் உடைந்து அழுத ஜீவாவை கட்டியணைத்து தேற்றிய விஜயின் கண்களும் கலங்கியிருந்தன.
அரசியல் வெற்றியின் உச்சியில் இருந்தாலும், தன்னை உருவாக்கிய உறவுகளை மறக்காத மனிதராக விஜய் அந்த தருணத்தில் பலரின் மனதையும் தொட்டுள்ளார். தற்போது இது தொடர்பான காணொளிகள் வைரலாகி வருகின்றன.
Listen News!