தமிழக அரசியலில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம், விஜய் முதலமைச்சராக பதவியேற்பாரா என்பது தான். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முக்கிய வெற்றியை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் முழு ஆதரவு இன்னும் உறுதியாகாததால் அரசியல் சூழல் தொடர்ந்து பரபரப்பாக உள்ளது.

விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தாலும், பெரும்பான்மை நிரூபணம் தொடர்பான காரணங்களால் இன்னும் அதிகாரபூர்வ அழைப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகரும் விஜயின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீமன் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் அவர், “தவெக தலைவர் விஜய் மிக விரைவில் ஆட்சி பொறுப்பை ஏற்கப் போகிறார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நமது விசில் சத்தம் கடவுளின் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. உண்மையும் இறையருளும் விஜய்க்கு எப்போதும் துணையாக இருக்கும்.” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, “சி. ஜோசப் விஜய் எனும் நான்...” என்று தொடங்கும் பதவியேற்பு நாளைக் காண தமிழகம் முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். ஸ்ரீமனின் இந்த உணர்ச்சிபூர்வமான பதிவு தற்போது விஜய் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Listen News!