தமிழ் சினிமாவில் திகில் கலந்த நகைச்சுவை திரைப்படங்களுக்கு தனி அடையாளமாக விளங்கும் 'காஞ்சனா' திரைப்பட வரிசை, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் வசூல் சாதனை படைத்ததோடு, குடும்ப ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு வரவழைத்தது. அதனைத் தொடர்ந்து வெளியான 'காஞ்சனா 2' மற்றும் 'காஞ்சனா 3' ஆகிய படங்களும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தன.
இந்த வெற்றித் தொடரின் அடுத்த பாகமாக 'காஞ்சனா 4' தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் ராகவா லாரன்ஸே எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேஹி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவும் 'காஞ்சனா 4' திரைப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் அவருடன் மிருனாள் தாகூரையும் களமிறக்கி உள்ளார் ராகவா லாரன்ஸ். இதனை அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகிகள் இடம்பெற உள்ளனர் என்பதையும் ராகவா லாரன்ஸ் உறுதி செய்துள்ளார். இதனால், இன்னும் ஒரு கதாநாயகி யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, 'காஞ்சனா' திரைப்பட வரிசையில் வெளியாகும் இறுதிப் பாகமாக 'காஞ்சனா 4' இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, முந்தைய பாகங்களை விட பிரம்மாண்டமாகவும், வித்தியாசமான கதைக்களத்துடனும் இந்தப் படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், படத்தின் டீசர், இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!