தமிழில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கயாடு லோகர், குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்த 'டிராகன்' திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததுடன், தொடர்ந்து பல புதிய திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.
தற்போது தமிழில் இம்மார்ட்டல், மஞ்சணத்தி, சூர்யா 48 உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இதேவேளை, தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியான நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு பல முறை கிடைத்தும், ஒவ்வொரு முறையும் அந்த திரைப்படம் கைவிடப்படுவதாக கயாடு லோகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படமும் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோகர், சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதெல்லாம், ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் கைவிடப்பட்டுவிடுகிறது. இருப்பினும், அவருடன் நான் இறுதியாக இணையும் திரைப்படம் நிச்சயம் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அதை விதியின் கையில் விட்டுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கயாடு லோகரின் இந்த கருத்து தற்போது சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிம்பு - கயாடு லோகர் கூட்டணியை விரைவில் திரையில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும், இந்த கூட்டணி தொடர்பான புதிய திரைப்படம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Listen News!