தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக முன்னணி நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், இன்றளவும் ரசிகர்களிடையே அவரை தனித்துவமாக வைத்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘தாய் கிழவி’ குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படம், 2026 பிப்ரவரி 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ராதிகா, ‘தாய் கிழவி’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில்,“முன்னதாக ‘இந்தியன்’ படத்தில் சுகன்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால் Prosthetic மேக்கப் போட்டு நடிக்க விருப்பமில்லை என்பதால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. ஆனால் இப்போது ‘தாய் கிழவி’ படத்தில், முற்றிலும் வித்தியாசமான தோற்றம் வேண்டும் என்று நானே இயக்குநரிடம் கேட்டேன். அதற்காக Prosthetic மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். மேக்அப் போட நான்கரை மணிநேரம், நீக்க இரண்டரை மணிநேரம் ஆனது.” என ராதிகா தெரிவித்துள்ளார்.
இந்த தகவல், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வயது, அனுபவம், புகழ் ஆகியவற்றைக் கடந்து, கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் எந்த அளவுக்கும் தயாராக இருப்பதை இது காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!