தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக வளர்ந்தவர் மாஸ்டர் மகேந்திரன். ‘நாட்டாமை’, ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’, ‘நட்புக்காக’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் ‘விழா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அண்மையில் வெளியான ‘29’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நிலவி வரும் மின்தடை பிரச்சினை குறித்து அவர் கூறியதாக பரவிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. “சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா?”, “தேவைப்பட்டால் என் வீட்டின் மின்சாரத்தைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்” போன்ற வகையில் அவர் பேசியதாக காணொளிகள் பரவி, பலரும் கடுமையாக விமர்சித்தனர். “மின்சாரம் இல்லாமல் ஒரு மாதம் வாழ முடியுமா?” என்ற கேள்வியுடன் சமூக வலைதளங்களில் விவாதமும் தீவிரமடைந்தது.
இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள மாஸ்டர் மகேந்திரன், தனது கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவும் குறுகிய வீடியோக்களில் முழுமையான பேச்சு இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தாம் எந்த அரசியல் கட்சியிலும் இல்லையெனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மின்சார தேவைக்கு தீர்வாக சூரிய ஒளி மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதையே தாம் முன்வைத்த கருத்தாகவும், கொச்சி விமான நிலையம் போன்ற முன்னுதாரணங்களை தமிழகத்திலும் விரிவுபடுத்தலாம் என்பதையும் தான் குறிப்பிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
அதே நேரத்தில், தன்னை தவறாக புரிந்து கொண்டு விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர், உண்மையை அறியாமல் பேசுவது தவறு எனவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!