• Jun 28 2026

விமர்சனங்களை தாண்டி மீண்டும் வரும் அஸ்வின்... ‘குட் நியூஸ்’ கை கொடுக்குமா?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த நடிகர் அஸ்வின், தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘குட் நியூஸ்’ மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். குடும்ப உறவுகள், பாசம், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்தை சாய் வினோத் ஜெயக்குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரமுருகன், இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையில், சிரிப்பும், சென்டிமெண்டும் கலந்த திரைக்கதையை அவர் உருவாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


நாயகனாக அஸ்வின் நடிக்கும் இப்படத்தில், கல்யாணி அனில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா மற்றும் மணிமேகலை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக சித்துகுமார் இணைந்துள்ள நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

படத்தின் தொடக்க விழாவில் தமிழ் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் விஜய் முதல் காட்சிக்கான கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்ததுடன், இயக்குநர் பாலா கேமராவை இயக்கி படத்திற்கு இனிய தொடக்கத்தை அளித்தார். நடிகர் ஆர்யாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

குடும்ப பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு உருவாகும் ‘குட் நியூஸ்’ திரைப்படம், அஸ்வினின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement