இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான 'ராமாயணா' படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் இன்று அதிகாலை 4.15 மணியளவில் (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியிடப்பட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

வால்மீகி எழுதிய ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் நிதேஷ் திவாரி மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இதற்கு முன்பு, புதுடெல்லியில் நடைபெற்ற 'பிரதம் சங்கல்ப்' நிகழ்ச்சியிலும், அமெரிக்காவின் சான்டியாகோ காமிக்-கான் விழாவிலும் திரையிடப்பட்ட டிரெய்லரின் சில காட்சிகள் செல்போனில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் கசிந்தன. இதையடுத்து படக்குழு உடனடியாக காப்புரிமை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களை நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது.
இந்நிலையில், அதிகாரபூர்வமாக வெளியான டிரெய்லரில் இடம்பெற்றுள்ள பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், மிரட்டலான பின்னணி இசை, காவிய உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்புகள் மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ரன்பீர் கபூரின் அமைதியான ராமர் தோற்றமும், சாய் பல்லவியின் சீதை கதாபாத்திரமும், யாஷின் ஆக்ரோஷமான ராவணன் தோற்றமும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இதனால், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவிய திரைப்படமாக உருவாகி வரும் 'ராமாயணா' மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
Listen News!