சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் மற்றும் சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக ரிப்பன் மாளிகை அருகே அமைதியான முறையில் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், சமூகத்தில் தனது கருத்துகளையும் செயற்பாடுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பாடகி சின்மயி அவர்கள், சமீபத்தில் போராட்டத்தில் பங்கேற்று வருகின்ற பணியாளர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் வழங்கி தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் பெண்கள். குறிப்பாக, கணவனின் துணையின்றி குழந்தைகளை வளர்த்து வரும் நபர்கள். இவர்களது வாழ்வாதாரத்திற்கு ஒரு முக்கிய உறுதுணையாக உள்ள இந்தப் பணி, தற்காலிக அடிப்படையில் நடத்தப்படுவதால் அவர்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என சின்மயி கூறியிருந்தார்.
தற்போது இப்போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்வதால் இதுபற்றி சின்மயி, "கடும் வெயில்ல போராடுறாங்க, அதனாலதான் என்னால முடிஞ்ச உதவியாக அவங்களுக்குத் தண்ணீரும், பிஸ்கட்டும் கொடுத்தேன். பணி நிரந்தரம் வேண்டும்னுதானே போராடுறாங்க, அதைக் கொடுப்பதில் என்ன பிரச்சனை அரசுக்கு?" எனக் கூறியுள்ளார்.
மேலும், "களத்தில் நிற்க முடியவில்லை என்றாலும், வெளியில் இருந்து குரல் கொடுத்தாவது ஆதரவு கொடுக்கலாம். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது. அரசு அதை நிறைவேற்றணும்." என்றும் தெரிவித்தார் சின்மயி.
Listen News!