தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்கள், சமூக அரசியலை மையமாக கொண்ட படைப்புகள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் தற்போது நடிகர் சிம்பு (STR) நடித்து வரும் புதிய படம் தான் ‘அரசன்’. இந்த படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

‘அரசன்’ திரைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘வடசென்னை’ படத்தின் கிளை கதையாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
‘வடசென்னை’ படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தின் கதாபாத்திரங்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக அல்லாமல், அதே உலகத்தை சார்ந்த ஒரு புதிய கோணத்தில் ‘அரசன்’ உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி என்பதே இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை படத்தின் கதை, கதாபாத்திரங்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளன. இதனால், படத்தை சுற்றியுள்ள மர்மமும், எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதியிடம், “அரசன் படத்தில் உங்களின் கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “உண்மையாகவே எனக்கு தெரியாது. அந்த படத்தின் கதையை எழுதும் போது, ‘உங்களின் ஞாபகம் வருகிறது… எழுதட்டுமா?’ என்று வெற்றிமாறன் என்னிடம் கேட்டார்.”
“அதற்கு நான் எழுதும் போது என்னுடைய ஞாபகம் வருவதே எனக்கு மகிழ்ச்சி தான். அப்படியே எழுதுங்கள்.” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!