தமிழ் இசை உலகில் தனித்துவமான குரல், சமூக கருத்துக்கள் மூலம் கவனம் பெற்ற பாடகர் வேடன் தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சிறுத்தையின் பல்லை மாலையாக அணிந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
ஆரம்பத்தில் அந்தப் பல் உண்மையிலேயே சிறுத்தைப்பல்லா அல்லது போலியான அலங்காரப் பொருளா என்ற சந்தேகம் நிலவியது. இதையடுத்து அந்தப் பல் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது வெளியான பரிசோதனை அறிக்கையில், அது 100 சதவீதம் அசல் சிறுத்தைப்பல் தான் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடல் பாகங்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை போன்ற அபூர்வ விலங்குகளின் பாகங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தடயவியல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாடகர் வேடனுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வனத்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!