பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், பிரபலங்களின் இல்லத் திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு சமையல் செய்வதில் பிரபலமாக காணப்படுகின்றார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில், சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு தங்களது திருமணம் நடைபெற்றதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார். இதற்காக காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அதற்கான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இதற்கு இடையில் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக எல்லா இடங்களிலும் முறையிட்டார். இதனால் ஜாய் கிரிஸில்டாவின் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தார் மாதம்பட்டி ரங்கராஜ். மேலும் ஜாயின் பதிவுகளால் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு 12 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஜாய் கிரிஸில்டாவின் பதிவுகளால் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதாகவும், இதனால் அவருடைய பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது .
ஜாய் கிரிஸில்டா தரப்பில், சமூக வலைதள பதிவுகளில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, அவர்களுடைய வர்த்தக நடவடிக்கை பற்றியோ எதுவும் பதிவிடவில்லை. இவர்களுக்கு 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறும் நிலையில், அந்த கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்யப்பட்டது? எப்போது ரத்து செய்யப்பட்டது? எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது? எவ்வளவு திருப்பிக் கொடுக்கப்பட்டது? என்ற எந்த விபரங்களையும் தெரிவிக்கவில்லை. எனவே கேட்டரிங் ஆடர்கள் ரத்து செய்யப்பட்டதற்கும் ஜாயின் பதிவுகளுக்கும் சம்பந்தமும் இல்லை என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கிற்கு இன்றைய தினம் தீர்ப்பளித்த நீதிபதி, ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Listen News!