தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் முத்துக்காளை. சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்த அவர், முதலில் ஸ்டண்ட் மாஸ்டராக தனது பயணத்தை ஆரம்பித்தார். 18 வயதிலேயே கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றிருந்த முத்துக்காளை, பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சினிமா வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த அவர், ஒரு கட்டத்தில் மதுப் பழக்கத்திற்கும் அடிமையானார். ஆனால் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற உறுதியுடன் கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமீபத்தில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பலருக்கும் முன்மாதிரியாக மாறினார்.
எனினும் தற்போது நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி, தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்ட முத்துக்காளை, “என் மனைவிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு 17 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் இன்னும் அவதிப்படுகிறார். கடந்த 17 நாட்களாக தனியாக போராடிக்கொண்டிருக்கிறேன். தமிழக முதலமைச்சர் விஜய் சார் உதவி செய்தால் என் மனைவியின் உயிரை காப்பாற்ற முடியும்” என உருக்கமாக கோரிக்கை வைத்திருந்தார்.
மருத்துவச் செலவுகள் மற்றும் குடும்ப சூழ்நிலையால் மனஅழுத்தத்தில் இருந்த முத்துக்காளையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
இந்த நிலையில், அவரது வேண்டுகோள் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. முத்துக்காளையின் மனைவிக்கு தேவையான மேல்சிகிச்சைகள் தாமதமின்றி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆதவ் அர்ஜுனா தொலைபேசி மூலம் முத்துக்காளையுடன் பேசியதாகவும், அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!