சமீபத்தில் கரூரில் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் பலர் காயமடைந்தனர்; சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் சென்னையில் அக்டோபர் 26ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்திருந்தார். இதில் சில குடும்பங்கள் சென்று விஜயைச் சந்தித்தனர். ஆனால், சில குடும்பங்கள் செல்ல மறுத்தனர்.
அவர்களில் ஒருவராக, கரூரில் கணவனை இழந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் பேட்டி பலரின் இதயத்தையும் உருக்கியுள்ளது.

அந்த பெண், “விஜய்யிடம் இருந்து நாங்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்லி இருக்கணும் என்று தான் எதிர்பார்த்தோம். பணத்தால் என் கணவரை திருப்பி தர முடியுமா? விஜயை சந்திக்க எங்களை கூப்பிட்டாங்க, நாங்க வரமாட்டோம்னு சொல்லிட்டோம்.
ஆனா, எங்க தங்கச்சின்னு சொல்லி எங்க கணவரோட உறவினர்களை கூட்டிட்டு போய் இருக்காங்க... அவங்களுக்கும் எங்களுக்கும் குடும்ப பிரச்சனை இருக்கு. அவங்கள விஜயை சந்திக்க கூட்டிட்டு போய் இருக்காங்க. அந்த விஷயம் தெரிந்ததும் அவர் கொடுத்த 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித இழப்புக்கு பணம் ஒரு தீர்வாகாது என்பதையும், உணர்ச்சிமிக்க ஆறுதல் முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Listen News!