விஜய் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருந்த ஜனநாயகன் திரைப்படம், சென்சார் பிரச்சனைகளால் தாமதமாகி வந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் லீக்கானது படக்குழுவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரும் இதற்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

படம் உருவாகுவதற்கு பின்னால் நூற்றுக்கணக்கானோரின் உழைப்பு உள்ளது. நடிகர்கள் மட்டுமல்லாமல், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என பலர் தங்களின் வாழ்வாதாரத்தை சினிமாவையே நம்பி வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஒரு திரைப்படம் லீக் ஆகுவது, அவர்களின் உழைப்பை மதிக்காத செயலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “மக்களை மகிழ்விக்கும் கலைக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை இது. சினிமாவை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்புக்கு எதிரான கொடூர தாக்குதல். இது மனித மனசாட்சிக்கு எதிரான நம்பிக்கை துரோகம்.” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது பலரின் கனவுகளும், உழைப்பும், வாழ்க்கையும் சேர்ந்த ஒன்று என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த லீக் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Listen News!